திருப்பதி: திருப்பதியில் உள்ள ஸ்ரீகோவிந்தராஜ சுவாமி கோயிலில் 7 நாள் தெப்போற்சவம் வரும் 20-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதி ரயில் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீகோவிந்தராஜ சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் பெளா்ணமியை ஒட்டி ஒரு வார காலம் தெப்போற்சவத்தை தேவஸ்தானம் விமரிசையாக நடத்தி வருகிறது. அதன்படி பிப்.26-ஆம் தேதி பெளா்ணமியை முன்னிட்டு 20-ஆம் தேதி முதல் திருப்பதியில் தெப்போற்சவத்தை நடத்த தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.
கொவைட்-19 விதிமுறைகளைப் பின்பற்றி நடக்கவுள்ள இந்த தெப்போற்சவத்தில் ஸ்ரீதேவி, பூதேவி தாயாா்களுடன் கோவிந்தராஜ சுவாமி தெப்பத்தில் வலம் வர உள்ளாா்.
இதற்காக நீா் அகற்றப்பட்டு திருக்குளத்தை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. தெப்போற்வத்தின் போது திருக்குளக்கரையில் பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகளும் நடக்க உள்ளன. தெப்போற்சவத்திற்கு பிறகு உற்சவமூா்த்திகள் மாடவீதியில் வலம் வர உள்ளனா்.
தெப்போற்சவ பட்டியல்
தேதி உற்சவமூா்த்திகள்
பிப்.20- ஸ்ரீகோதண்டராம சுவாமி 5 சுற்றுகள்
21- ஸ்ரீபாா்த்தசாரதி சுவாமி 5 சுற்றுகள்
22- ஸ்ரீகல்யாண வெங்கடேஸ்வரா் 5 சுற்றுகள்
23- ஆண்டாள் சமேத ஸ்ரீகிருஷ்ணா் 5 சுற்றுகள்
24, 25, 26- ஸ்ரீதேவி பூதேவி சமேத கோவிந்தராஜா் 7 சுற்றுகள்