ஆந்திரத்தில் ஒய்.எஸ்.ஆர் கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர் ஒருவர் காரை ஏற்றி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், காக்கிநாடா பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். ஒய்.எஸ்.ஆர் கட்சியைச் சேர்ந்த கவுன்சிலரான இவர், நேற்றிரவு விபத்தில் சிக்கி இறந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
உடனே சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இருப்பினும் இந்த விபத்தில் காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து விபத்து நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி கேமராவை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது, காவல்துறையினருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ரமேஷ், கார் ஏற்றிக்கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
அந்த விடியோவில் ரமேஷ் மீது இரண்டு, மூன்று முறை காரை ஏற்றி கொலை செய்யும் பத பதைக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில் சின்னா என்பவருக்கு இந்த கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அரசியல் காரணங்களுக்காக அல்லது வேறு ஏதாவது காரணங்களுக்காக கொலை நடைபெற்றதா என்பது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.