இதுவரை ரூ.338 கோடி மதிப்பிலான கரோனா தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் நட்பு நாடுகளான பூடான், மாலத்தீவு, வங்கதேசம், நேபாளம் மியான்மர் மற்றும் சீஷெல்ஸ் ஆகிய நாடுகளுக்கு ஜனவரி 20ஆம் தேதி முதல் இலவசமாக தடுப்பூசிகளை வழங்கவுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்தது.
அதனைத் தொடர்ந்து இலங்கை, பூடான், மாலத்தீவு, வங்கதேசம், நேபாளம், மியான்மா், செஷல்ஸ், ஆப்கானிஸ்தான், மெக்சிகோ உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு கரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்பட்டது.
இந்நிலையில் இதுகுறித்த தகவலைப் பகிர்ந்து கொண்டுள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பிப்ரவரி 8ஆம் தேதி நிலவரப்படி இதுவரை ரு.338 கோடி மதிப்பிலான கரோனா தடுப்பூசிகள் ஏற்றுமதியாகியுள்ளதாகத் தெரிவித்தார்.
அவற்றில் ரூ.125.4 கோடி மதிப்பிலான 62.7 லட்சம் கரோனா தடுப்பூசிகள் இலவசமாகவும், ரூ.213.32 கோடி மதிப்பிலான 1.05 கோடி கரோனா தடுப்பூசிகள் மானிய விலையிலும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.