கடந்தாண்டு 6 கோடி பிபிஇ உடைகள் உற்பத்தி செய்யப்பட்டதாக மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி மக்களவையில் எழுத்துப் பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது: கரோனா தொற்று காலத்தில் பிபிஇ உடைகள், என்-95 முகக் கவசங்கள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்டன.
கடந்தாண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரை, 6 கோடி பிபிஇ உடைகள், 15 கோடி என்-95 முகக் கவசங்கள் தயாரிக்கப்பட்டன. பிபிஇ உடைகள் தயாரிப்புக்கு 1100 நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன.
என்-95 முகக்கவசங்கள் தயாரிப்புக்கு 200 நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. நாள் ஒன்றுக்கு 4.5 லட்சம் பிபிஇ உடைகள், 32 லட்சம் என்-95 முகக் கவசங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் 1.56 கோடி பிபிஇ உடைகள், 2.79 கோடி என்-95 முகக் கவசங்களை கொள்முதல் செய்துள்ளது.
கரோனா காரணமாக ஜவுளி ஏற்றுமதி கடந்தாண்டு ஜனவரி முதல் நவம்பர் வரையிலான காலத்தில் குறைந்தது. எனவே, ஏற்றுமதியை அதிகரிக்க, ஏற்றுமதி ஜவுளி பொருள்களுக்கான வரி குறைப்பு திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.