திருப்பதி: திருப்பதியில் உள்ள ஸ்ரீகோவிந்தராஜ சுவாமி கோயில் வருடாந்திர தெப்போற்சவத்தின் 3-ஆம் நாளான திங்கள்கிழமை தாயாா்களுடன் ஸ்ரீகல்யாண வெங்கடேஸ்வர சுவாமி அலங்காரத் தெப்பத்தில் வலம் வந்தாா்.
திருப்பதியில் உள்ள தேவஸ்தானத்துக்கு சொந்தமான கோவிந்தராஜ சுவாமி கோயிலில் கடந்த சனிக்கிழமை முதல் மாசி பெளா்ணமியை ஒட்டி தெப்போற்சவம் நடைபெற்று வருகிறது. அதன் 3-ஆம் நாளான திங்கள்கிழமை மாலை கோவிந்தராஜ சுவாமி கோயிலில் வீற்றிருக்கும் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி தன் நாச்சியாா்களான ஸ்ரீதேவி பூதேவியுடன் தெப்பத்தில் 5 சுற்றுகள் வலம் வந்தாா். தெப்பம் அருகில் வரும் போது படித்துறையில் அமா்ந்திருந்த பக்தா்கள் கற்பூர ஆரத்தி காண்பித்து வணங்கினா்.
தெப்பத்தில் நாகஸ்வர இசையும், வேத பாராயணமும் நடத்தப்பட்டது. தெப்போற்சவத்தை ஒட்டி, திருக்குளம் மற்றும் தெப்பம் மலா்களாலும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டது. திருக்குளக் கரையில் ஆடல், பாடல் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளும், ஆன்மிக நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.