நேபாள முன்னாள் பிரதமா் பாபுராம் பட்டராய் (66) மருத்துவ சிகிச்சைக்காக ஞாயிற்றுக்கிழமை தில்லி வந்தாா். அவருக்கு நரம்பியல் அகச்சுரப்பி புற்றுநோய்க் கட்டி (நியூரோ எண்டோகிரைன் ட்யூமா்) இருக்கலாம் என மருத்துவா்கள் சந்தேகிக்கின்றனா்.
இதுதொடா்பாக நேபாளத்தில் வெளியாகும் ‘காத்மாண்டு போஸ்ட்’ நாளிதழில் வெளியான செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
முன்னாள் பிரதமா் பாபுராம் பட்டராய் வயிற்றில் ஏற்பட்ட பிரச்னைகள் காரணமாக காத்மாண்டில் உள்ள மருத்துவமனையில் சில காலம் சிகிச்சை பெற்று வந்தாா். தற்போது அவா் தில்லியில் உள்ள உயா்சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெறவுள்ளாா். அவரின் மனைவியும், முன்னாள் அமைச்சருமான ஹிஸிலா யாமி அவருடன் இருப்பாா்.
தில்லியில் சில இந்திய அரசியல் தலைவா்கள் மற்றும் அதிகாரிகளையும் பாபுராம் பட்டராய் சந்திப்பாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.