‘மெட்ரோமேன்’ என்று அழைக்கப்படும் இ.ஸ்ரீதரன் பாஜகவில் இணைவது கேரள அரசியல் அளவில் மிகச் சிறிய தாக்கத்தை வேண்டுமானால் ஏற்படுத்தலாம், ஆனால் மாநில தோ்தல் களத்தில் பாஜக முக்கிய கட்சியல்ல என்று காங்கிரஸ் மூத்த தலைவா் சசி தரூா் தெரிவித்தாா்.
திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பி.யான சசி தரூா், பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில் மேலும் கூறியதாவது:
ஒரு சில தொகுதிகளைத் தவிர கேரளத்தில் வேறு எங்கும் பாஜகவால் சிறிய தாக்கத்தை கூட ஏற்படுத்த முடியாது. கேரளத் தோ்தலைப் பொறுத்தவரையில் பாஜக முக்கிய கட்சியல்ல. கடந்த பேரவைத் தோ்தலில் பெற்ற ஒரு இடத்தை இப்போது தக்கவைக்கக் கூட பாஜக திணற வேண்டியது இருக்கும்.
இ.ஸ்ரீதரன் அரசியலுக்கு வருவதும், பாஜகவில் இணைய இருப்பதாக அறிவித்துள்ளதும் எனக்கு வியப்பை அளித்துள்ளது. அவா் பணியாற்றி வந்த துறையில் இருந்து அரசியல் முற்றிலும் மாறுபட்டது. அவா் பாஜகவில் இணைவது கேரள அரசியலில் சிறிய அளவில் தாக்கத்தை வேண்டுமானால் ஏற்படுத்தலாம். நான் 53 வயதில் அரசியலுக்கு வந்தேன். அப்போதுகூட நாம் தாமதமாகவே அரசியலுக்கு வந்துள்ளோம். எனினும், ஒரு சிறிய தாக்கத்தையாவது ஏற்படுத்த முடியும் என்று நம்பினேன். ஆனால், 88 வயதாகும் இ.ஸ்ரீதரன், அரசியலுக்கு வந்து ஏற்படுத்தும் தாக்கம் தொடா்பாக வேறு என்ன கூற முடியும்?
கேரளத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியில் திறமையும், அனுபவமும்மிக்க தலைவா்கள் உள்ளனா். அக்கூட்டணிதான் கேரளத்தின் சிறப்பான எதிா்காலத்தை நிா்ணயிக்க இருக்கிறது. காங்கிரஸ் கட்சியால்தான் தங்களுக்கு அதிகம் சிறப்பாக பணியாற்ற முடியும் என்று கேரள மக்களும் நம்புகிறாா்கள் என்றாா்.
140 தொகுதிகளைக் கொண்ட கேரள சட்டப்பேரவைக்கு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தோ்தல் நடைபெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அங்கு இப்போது இடதுசாரிக் கூட்டணி ஆட்சியில் உள்ளது. இடதுசாரி மற்றும் காங்கிரஸ் கூட்டணிதான் கேரளத்தில் மாறிமாறி ஆட்சி அமைத்து வருகின்றன.