நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 179 நாள்களுக்குப் பிறகு 2.54 லட்சமாக குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை 6-ஆம் தேதி 2.53 லட்சம் பேர் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்தனர். இதுவே மிகக் குறைவாக இருந்த நிலையில், 179 நாள்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் குறைந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 20,035 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், 23,181 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கடந்த 35 நாள்களாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையை விட குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
மொத்தமாக குணமடைவோர் எண்ணிக்கை 99 லட்சத்தை நெருங்குகிறது. இதனால் குணமடைவோர் விகிதம் 96.08 சதவிகிதமாக உள்ளது. இதில் 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மட்டும் 78 சதவிகிதத்தினர் குணமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளம், மகாராஷ்டிரம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் குணமடைவோர் விகிதம் அதிகமாகவுள்ளது.
இதேபோன்று 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மட்டுமே 80.19 சதவிகித பாதிப்புகள் பதிவாகி வருவதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.