இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவர் சௌரவ் கங்குலி விரைவில் குணமடைய வேண்டி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சௌரவ் கங்குலிக்கு இன்று (சனிக்கிழமை) காலை நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து, உடனடியாக கொல்கத்தாவிலுள்ள உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில், கங்குலி விரைவில் குணமடைய வேண்டி மம்தா பானர்ஜி சுட்டுரையில் பதிவு செய்துள்ளார். இதுபற்றி அவர் பதிவிட்டுள்ளதாவது:
"கங்குலிக்கு லேசான நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது. அவர் விரைவில் முழுமையாக குணமடைய வாழ்த்துகிறேன்."
இதனிடையே, கங்குலி உடல்நிலை குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்தது:
"கங்குலியின் குடும்பத்தினரிடம் பேசினேன். அவரது உடல்நிலை சீராக உள்ளது. சிகிச்சைக்கு நன்கு ஒத்துழைக்கிறது."
இதுதவிர கிரிக்கெட் வீரர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி, அஜின்க்யா ரஹானே, முகமது ஷமி, முகமது கைஃப், அனில் கும்ப்ளே உள்ளிட்டோரும் கங்குலி விரைவில் குணமடைய வேண்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.