தில்லி நகரின் பல்வேறு பகுதிகளில் காலை முதலே பரவலாக மழை பெய்தது. இதனால் தில்லி மற்றும் அதன் சுற்றுவாட்டாரப் பகுதிகளில் கடும் குளிர் நிலவி வருகிறது.
தில்லி, ஹரியாணா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது.
அதன்படி தில்லி நகரின் பல்வேறு பகுதிகளில் இன்று (ஜன.2) காலை முதலே பரவலாக மழை பெய்தது. மேலும், ரிவாரி, பிவாடி, மனேசார், குருகிராம், ஃபருக் நகர், சோனிபட், பானிபட், கர்னால், ஷாம்லி, நர்வானா ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது.
ஏற்கனவே பனிமூட்டம் காரணமாக தலைநகரில் கடும் குளிர் நிலவி வந்த நிலையில், தற்போது மழையால் மேலும் குளிர் அதிகரித்துள்ளது.
பனிமூட்டத்தால் தில்லி காஸிப்பூர் எல்லையில் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். மேலும், பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மாலை 5.30 மணி முதல் காலை 5.30 மணி வரை கடும் பனி காணப்படும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.