பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்-இன் ஒருங்கிணைப்புக் கூட்டம் ஜனவரி 5 முதல் 7 வரை ஆமதாபாத்தில் நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தது:
"இந்தக் கூட்டத்துக்கு ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தலைமை வகிப்பார். பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டாவும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கிறார். 2 நாள்கள் ஆமதாபாத்தில் தங்கவுள்ள நட்டா, முதல் நாளில் இந்த ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் பங்கேற்கிறார். அதற்கு அடுத்த நாள் கட்சி நிர்வாகிகளைச் சந்திக்கிறார்.
மத்திய அரசு குறித்த மதிப்பீடும் கூட்டத்தில் இடம்பெறலாம் என்பதால், மத்திய அமைச்சர்களும் கூட்டத்தில் பங்கேற்கலாம் எனத் தெரிகிறது.
வேளாண் சட்டங்கள் மற்றும் விவசாயிகள் போராட்டம், மேற்கு வங்கம், அசாம், கேரளம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல் உள்ளிட்டவை பற்றியும் கூட்டத்தில் விவாதிக்கப்படலாம்."
தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் வரவுள்ளன. இந்த நிலையில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.