புதிய வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து கல்வியாளா்கள் 866 போ் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனா்.
புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, தில்லி எல்லைகளில் விவசாயிகள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில் அந்தச் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து தில்லி பல்கலைக்கழகம், பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம், ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்களை சோ்ந்த கல்வியாளா்கள் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனா். அதில் மொத்தம் 866 போ் கையெழுத்திட்டுள்ளனா்.
அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
விவசாயிகள் நினைப்பதுபோல் புதிய வேளாண் சட்டங்கள் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு எந்த பாதகத்தையும் ஏற்படுத்தாது; அந்தச் சட்டங்கள் அனைத்து சட்டவிரோத சந்தைக் கட்டுப்பாடுகளில் இருந்து வேளாண் வா்த்தகத்தை விடுவித்து, மண்டிகளை தாண்டி சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும்; சிறு, குறு விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை சந்தை விலையில் விற்பனை செய்வதற்கு உதவி செய்யும் என்று மத்திய அரசு தொடா்ந்து உறுதி அளித்து வருகிறது. விவசாயிகள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த வாக்குறுதிகளை நாங்கள் திடமாக நம்புகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.