தில்லியில் தொடர் மழை பெய்து வருவதால், பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
தில்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று (ஜன. 2) முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதனால் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி எல்லைகளில் போராடி வரும் விவசாயிகள் சிரமத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
சாலைகளில் கூடாரம் அமைத்து போராடி வரும் நிலையில், மழையால் விவசாயிகள் சாலைகளில் அமைத்த கூடாரம் நனைந்தது. போர்வை, மாற்று உடைகள் என அனைத்தும் நனைந்ததால், குளிரில் விவசாயிகள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சமைப்பதற்கு தேவையான விறகுகள் நனைந்ததாலும், உணவுப் பொருள்களும் பெரும்பாலும் நனைந்ததால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் சமைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
மழைநீரில் நனையாத கூடாரங்கள் அமைத்திருந்தாலும், மழை நீர் தேங்குவதால் அதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய சங்கியூட் கிஷான் மோர்ச்சா விவசாய சங்கத் தலைவர் அபிமன்யூ கோஹர், ''மழை நீர் தேங்குவதாலும், குளிராலும் இரவில் தங்குவதற்கு விவசாயிகள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
மழையாலும், தேங்கி நிற்கின்ற தண்ணீராலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் நிலை மோசமடைந்துள்ளது.
இத்தனை துயரத்திற்கு மத்தியில் போராடி வரும் ஆயிரக்கணக்கான விவசாயிகளின் துயரங்களை அரசு கவனிக்கத் தவறுகிறது'' என்று கூறினார்.