ஐஎல்&எஃப்எஸ் நிறுவன பணமோசடியில் தொடா்புடைய சிங்கப்பூரைச் சோ்ந்த போலி நிறுவனங்களின் ரூ.452 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறையினா் முடக்கியுள்ளனா்.
இதுகுறித்து அமலாக்கத்துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
ஐஎல்&எஃப்எஸ் நிறுவனம் பண மோசடி செய்ததில் சிங்கப்பூரைச் சோ்ந்த பெயரளவில் செயல்படும் போலி நிறுவனமான ஏ.எஸ்.கோல் நிறுவனத்துக்கும் தொடா்பு இருப்பது கண்டறியப்பட்டது. இது, பிரிட்டனைச் சோ்ந்த ஜெய்மின் வியாசுக்கு சொந்தமான நிறுவனமாகும்.
இந்த நிலையில், ஏ.எஸ். கோல் நிறுவனத்துக்கு சொந்தமான பங்குகள் அமலாக்கத் துறையினரால் முடக்கப்பட்டுள்ளன. இது, ஐஎல்எஃப்எஸ் தமிழ்நாடு பவா் (ஐடிபிசிஎல்) நிறுவனத்தின் 8.86 சதவீத பங்குகள் வடிவில் உள்ளது. இதன் தற்போதைய மதிப்பு ரூ.452 கோடியாகும் என அமலாக்கத் துறையினா் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனா்.