குஜராத்தில் ஜனவரி 11 முதல் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்க முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு அரசு புதன்கிழமை அறிவித்தது.
இதைத்தொடர்ந்து தொடக்கப் பள்ளிகள் மற்றும் பிற வகுப்புகள் திறப்பது தொடர்பான முடிவு பின்னர் எடுக்கப்படும் என்ற கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக கல்வித்துறை அமைச்சர் பூபேந்திரசிங் சுதாசமா கூறுகையில்,
குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பள்ளிகளையும், மாநிலத்தில் உள்ள கல்லூரிகளையும் மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதற்கு முன்னதாக பள்ளிகள் திறக்கப்படுவது தொடர்பாக கல்வி வல்லுநர்கள், கல்வியாளர்களிடம் கருத்துக் கேட்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜனவரி 11 முதல் கரோனா தொடர்பான அனைத்து கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுடன் பள்ளி, கல்லூரி திறக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் முதுகலை, மருத்துவ மற்றும் துணை மருத்துவங்களுக்கான வகுப்புகளும் திறக்கப்படும். மேலும், தற்போது கல்வி நிறுவனங்கள் தொடரும் ஆன்லைன் கல்வியையும் தொடர்ந்து பின்பற்றலாம் என்று அவர் கூறியுள்ளார்.