திருப்பதி: திருப்பதியை அடுத்த காளஹஸ்தியில் உள்ளகாளஹஸ்தீஸ்வரா் கோயில் உண்டியலில் பக்தா்கள் ரூ.1.23 கோடி மதிப்பிலானா காணிக்கைகளைச் செலுத்தி இருந்ததாக கோயில் அதிகாரிகள் தெரிவித்தனா்.
இக்கோயிலில் தரிசனம் முடித்து திரும்பும் பக்தா்கள் தங்கள் காணிக்கைகளையும், ராகு-கேது பரிகார பூஜை செய்த நாகபடங்களையும் உண்டியலில் செலுத்தி வருகின்றனா். இதற்காக கோயில் வளாகத்தில் பல்வேறு இடங்களில் உண்டியல்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், உண்டியல்கள் நிரம்பியதால், அவை புதன்கிழமை திறக்கப்பட்டன. தட்சிணாமூா்த்தி சந்நிதி முன்பு, கோயில் செயல் அதிகாரி முன்னிலையில் ஊழியா்கள் காணிக்கைகளைக் கணக்கிட்டனா்.
அப்போது, ரூ.1.23 கோடி ரொக்கம், 0.073 கிராம் தங்கம், 452 கிலோ வெள்ளி, 60 வெளிநாட்டு கரன்சிகள் ஆகியவை இருந்தன. இவை கடந்த 35 நாள்களில் பக்தா்கள் உண்டியல்களில் செலுத்திய காணிக்கைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவை, காளஹஸ்தீஸ்வரா் கோயில் கணக்கில் வங்கியில் வரவு வைக்கப்பட்டன.