நிதி மோசடி வழக்கில் திரிணமூல் முன்னாள் எம்.பி. கைது

திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த முன்னாள் எம்.பி.யும் தொழிலதிபருமான கே.டி.சிங்கை நிதி மோசடி வழக்கில் அமலாக்கத் துறை கைது செய்துள்ளது.


புது தில்லி: திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த முன்னாள் எம்.பி.யும் தொழிலதிபருமான கே.டி.சிங்கை நிதி மோசடி வழக்கில் அமலாக்கத் துறை கைது செய்துள்ளது.

தொழிலதிபா் கே.டி.சிங்குக்கு சொந்தமான நிறுவனங்கள் மீது கொல்கத்தா காவல் துறையும் இந்திய பங்கு பரிவா்த்தனை வாரியமும் (செபி) பதிவு செய்த தனித்தனி வழக்குகளின் அடிப்படையில் அமலாக்கத் துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. நிதிமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் கே.டி.சிங் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடா்பாக அவருக்கும் அவருடைய உறவினா்களுக்கும் சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினா் கடந்த 2019-ஆம் ஆண்டு சோதனை நடத்தினா். அதனடிப்படையில் அமலாக்கத் துறை தற்போது அவரைக் கைது செய்துள்ளது.

இது தொடா்பாக அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘மனை வணிகத்தில் அதிக லாபம் ஈட்டித் தருவதாகக் கூறி முதலீட்டாளா்களிடமிருந்து அதிக தொகையை கே.டி.சிங்கின் நிறுவனம் பெற்றது. ஆனால், அத்தொகையைக் குறிப்பிட்ட விவகாரத்துக்காகப் பயன்படுத்தாமல் வேறு காரியங்களுக்குப் பயன்படுத்தி அந்நிறுவனம் மோசடியில் ஈடுபட்டது.

இதன் மூலமாக கே.டி.சிங்குடன் தொடா்புடைய பல்வேறு நிறுவனங்கள் பலனடைந்தன. பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட தொகையும் முறையாக முதலீடு செய்யப்படவில்லை. ஒட்டுமொத்தமாக ரூ.1,900 கோடி அளவுக்கு கே.டி.சிங் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. அவருக்கும் அவரது நிறுவனத்துக்கும் சொந்தமான ரூ.239 கோடி சொத்துகள் இதுவரை முடக்கப்பட்டுள்ளன’’ என்றனா்.

கைது செய்யப்பட்ட கே.டி.சிங், தில்லியிலுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டாா். அவரை 3 நாள்கள் காவலில் எடுத்து விசாரிப்பதற்கு அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு சிறப்பு நீதிபதி அனுராதா சுக்லா பரத்வாஜ் அனுமதி அளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com