புது தில்லி: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் 2 நாள் பயணமாக ஆப்கானிஸ்தான் சென்றுள்ளார். அங்கு அந்நாட்டின் முக்கிய தலைவர்களை அவர் புதன்கிழமை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதுதொடர்பாக தில்லியில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரக அதிகாரி கூறியது:
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கனி, தலிபான்களுடனான ஆப்கன் அமைதிப் பேச்சுவார்த்தைக் குழு தலைவர் அப்துல்லா அப்துல்லா, ஆப்கானிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹம்துல்லா மோஹிப் உள்ளிட்டோரை புதன்கிழமை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார் என்று தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பு குறித்து ஆப்கன் அமைதிப் பேச்சுவார்த்தைக் குழு தலைவர் அப்துல்லா அப்துல்லா சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், "ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள், தலிபான்களுடனான 2-ஆம் கட்ட பேச்சுவார்த்தை, இங்கு அமைதியை நிலைநாட்டுவதில் இந்தியாவின் பங்கு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அஜித் தோவல் உடன் விவாதிக்கப்பட்டது' என்று தெரிவித்தார்.