புது தில்லி: நாடு முழுவதும் தடுப்பூசி செயல்திட்டம் நடைமுறைக்கு வரும் முதல் நாளில் மொத்தம் 2,934 இடங்களில் 3 லட்சம் சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.
இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சக அதிகாரிகள் கூறியுள்ளதாவது:
நாடு முழுவதும் வரும் ஜனவரி 16-ஆம் தேதி கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்படவுள்ளன. முதல் நாளில் நாடு முழுவதும் மொத்தம் 2,934 இடங்களில் சுமார் 3 லட்சம் சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.
தடுப்பூசி செலுத்தும் ஒவ்வொரு அமர்விலும் அதிகபட்சமாக 100 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.
தடுப்பூசி செலுத்தும் பணிகளை மேற்கொள்ளும் ஒவ்வொரு இடத்திலும் ஒருநாளைக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே தடுப்பூசிகளை செலுத்தவேண்டும் என்று மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.