மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி அரசுக்கு ஆதரவு தெரிவிக்கும் 41 எம்.எல்.ஏ.க்கள் பாஜகவில் இணையத் தயாராக பாஜக பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா தெரிவித்துள்ளார்.
இதுபற்றி இந்தூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசியது:
"பாஜகவில் இணைய விரும்பும் 41 எம்.எல்.ஏ.க்களின் பட்டியல் என்னிடம் உள்ளது. அவர்களை கட்சியில் இணைத்தால், மம்தா அரசு கவிழும். ஆனால், கட்சியில் யாரை சேர்க்க வேண்டும், யாரை சேர்க்க வேண்டாம் என்று பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
இவர்களில் நல்ல பெயர் இல்லாதவர்களை சேர்க்க வேண்டாம் என நாங்கள் முடிவெடுத்துள்ளோம்.
மேற்கு வங்கத்தில் வன்முறை அரசியல் நடைபெற்று வருகிறது. ஊடுருவியுள்ளவர்கள் பாஜக நிர்வாகிகளைத் தாக்குகின்றனர். மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் அவர்கள் அடையாளம் காணப்படுவார்கள். அப்படி அடையாளம் காணப்பட்டால் அவர்களால் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தொடர முடியாது."
மேற்கு வங்கத்தில் தேர்தல் வரவுள்ள நிலையில் விஜய்வர்கியா இவ்வாறு தெரிவித்துள்ளார்.