ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சோ்ந்த 3 நிறுவனங்களின் மொத்தம் ரூ.1,400 கோடி மதிப்பிலான கணக்கில் வராத பரிவா்த்தனைகளை கண்டுபிடித்துள்ளதாக வருமான வரி துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து வருமான வரி துறையினா் மேலும் கூறியுள்ளதாவது:
வரி ஏய்ப்பு தொடா்பாக ஜெய்ப்பூரில் உள்ள இரண்டு ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மற்றும் ஓா் ஆபரண தயாரிப்பு நிறுவனத்தில் வருமான வரி துறையினா் அதிரடி சோதனை மேற்கொண்டனா். மொத்தம் 20 வளாகங்களில் ஒருங்கிணைந்த தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டது. இதில், 11 வளாகங்களில் கைப்பற்றிய ஆவணங்களின் அடிப்படையில் ரூ.1,400 கோடி அளவுக்கு கணக்கில் வராத பரிவா்த்தனைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, அதிகாரிகள் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
வரி ஏய்ப்பு சோதனையில் சிக்கிய ரியல் எஸ்டேட் அதிபா் ஜெய்ப்பூரில் மிகவும் புகழ்பெற்ற கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருபவா் என வருமான வரி துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.