தில்லியில் டிராக்டர் பேரணியின்போது நடந்த வன்முறை தொடர்பாக விவாதிக்க மற்ற சங்கங்ளுக்கு சம்யுக்தா கிசான் மோர்ச்சா அழைப்பு விடுத்துள்ளது.
தில்லியில் விவசாயிகள் செவ்வாய்க்கிழமை நடத்திய டிராக்டர் பேரணியில் ஆங்காங்கே வன்முறை வெடித்ததால் தலைநகர் தில்லி போர்க்களமாக மாறியது. போலீஸாரின் தடுப்புகளை உடைத்தெறிந்து பேரணியாகச் செல்ல விவசாயிகள் முயற்சி செய்ததால், தடியடி-கண்ணீர்ப்புகை குண்டுவீச்சு வீசும் அளவுக்கு நிலைமை மோசமானது.
பேருந்துகள், போலீஸாரின் வாகனங்கள், அரசுப் பேருந்துகள் ஆகியவற்றின் மீது போராட்டக்கார்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தி சேதப்படுத்தினர். விவசாயிகள்-போலீஸார் இடையே ஏற்பட்ட மோதலில் போலீஸார் 300 பேர் காயமடைந்துள்ளதாக தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது. அதேபோல டிராக்டர் கவிழ்ந்து விவசாயி ஒருவர் பலியானார்.
தில்லியில் நடந்த வன்முறைக்கு பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் விவசாயிகள் இல்லை என்றும் வன்முறைக்கும் தங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்த மற்ற சங்கங்களுக்கு சம்யுக்தா கிசான் மோர்ச்சா அழைப்பு விடுத்துள்ளது. இதில் கலந்துகொள்ள இருக்கின்றன. இன்று பிற்பகல் 3 மணிக்கு கூட்டம் நடைபெறவிருக்கிறது.
முன்னதாக, பஞ்சாபைச் சேர்ந்த 32 விவசாய சங்கங்கள் நேற்று சிங்கு எல்லையில் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
தில்லியில் டிராக்டர் அணிவகுப்பின் போது நடந்த வன்முறை தொடர்பான அனைத்து அம்சங்களும் விவாதிக்கப்படும் என்று சம்யுக்தா கிசான் மோர்ச்சா தெரிவித்துள்ளது.