மக்களவை உறுப்பினர்களுள் 311 பேர் இரு தவணை தடுப்பூசிகளும் செலுத்திக் கொண்டதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா திங்கள்கிழமை தெரிவித்தார்.
தில்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்தது:
"மக்களவை உறுப்பினர்களுள் 311 பேர் இரு தவணை தடுப்பூசிகளும் செலுத்திக் கொண்டுள்ளனர். சில காரணங்களுக்காக 23 பேர் முதல் தவணை தடுப்பூசிகூட செலுத்திக் கொள்ளவில்லை. எனினும், நாடாளுமன்ற வளாகத்தில் 24 மணி நேரம் பரிசோதனை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கரோனா பெருந்தொற்று காரணமாக உறுப்பினர்கள் இடைவெளிவிட்டு அமரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன. எவ்விதப் பிரச்னையுமின்றி அவையை நடத்துவதில் கரோனா வழிமுறைகளைப் பின்பற்றுவது மிகப் பெரிய சவால்.
அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் வகையில் பல்வேறு நிலைகளில் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 500-க்கும் மேற்பட்ட மக்களவை உறுப்பினர்கள் குறைந்தபட்சம் முதல் தவணை தடுப்பூசியாவது செலுத்திக் கொண்டுள்ளனர். இவர்களுடன் நாடாளுமன்ற பணியாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும்."
இதையும் படிக்க: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19ல் தொடக்கம்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 19-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13-இல் நிறைவடைகிறது.