வேளாண் துறையில் அறுவடைக்கு பிறகான காலத்தில் புரட்சி தேவை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கி எனப்படும் நபார்டு வங்கி தொடங்கப்பட்டு இன்றோடு 29ஆண்டுகள் நிறைவடைகிறது.
இதனை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி, வேளாண் துறை உற்பத்தி தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், வேளாண் துறையில் அறுவடைக்கு பிறகான காலத்தில் புரட்சி தேவை எனக் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "விவசாய துறையில் உற்பத்தியை அதிகப்படுத்தும் வகையில் எங்கள் வேகத்தையும் அளவையும் தீவிரப்படுத்த கடும் முயற்சியை தொடர்ந்து மேற்கொண்டுவருகிறோம். நீர்பாசனம், நாற்று நடுதல், அறுவடை உள்ளிவற்றில் உள்ள பிரச்னைகளை களைய விரிவான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம்" என்றார்.
வேளாண் துறையில் இளைஞர்களை ஊக்கப்படுத்தவும் அது சார்ந்த சுய தொழில்களை மேம்படுத்தவும் அரசு கவனம் செலுத்திவருவதாக பிரதமர் தெரிவித்தார்.
விவசாயிகளின் வருமானமானது 2022-ஆம் ஆண்டுக்குள் இரு மடங்காக்கப்படும் என உறுதியளித்த மோடி, கிராம மக்களின் விருப்பம் மற்றும் எதிர்பார்ப்புக்கு ஏற்ப சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க உத்வேகம் அளித்து வருகிறோம் எனக் கூறினார்.