ஹிமாச்சலில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அம்மாநில முதல்வர் ஜெய் ராம் தாக்குருடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடர்புகொண்டு நிலைமைகளைக் கேட்டறிந்தார்.
மேலும், பேரிடர் மீட்புப் பணிகளுக்கான அனைத்து உதவிகளையும் உள்துறை அமைச்சகம் செய்து கொடுக்கும் என்றும் உறுதி அளித்தார்.
இது தொடர்பாக தமது சுட்டுரையில் அவர் பதிவிட்டுள்ளதாவது, ’’தொடர் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஹிமாச்சலப் பிரதேச முதல்வர் ஜெய் ராம் தாக்குருடன் தொலைபேசி வாயிலாக பேசி நிலைமையை கேட்டறிந்தேன்.
ஹிமாச்சலில் மீட்புப் பணிகளுக்காக தேசிய பேரிடர் மீட்புப் படை விரைவில் அனுப்பப்படும். ஹிமாச்சலின் நிலைமையை உள் துறை அமைச்சகம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது’’ என்று பதிவிட்டுள்ளார்.
ஹிமாச்சலில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சமதளமற்ற மலைப்பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
கங்ரா மாவட்டத்தில் ஏற்பட்ட தொடர் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஆறு வீடுகள் சேதமடைந்தன. இதில் 10-க்கும் அதிகமானோர் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது. அவர்களை மீட்கும் பணிகளில் மாநில பேரிடர் மீட்புப் படை களமிறக்கப்பட்டுள்ளது.
மேலும், தர்மசாலா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஏராளமான வாகனங்கள் நீரில் மூழ்கின. ஏராளமான கார், இருசக்கர வாகனங்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன.