ஆப்கானிஸ்தான் அதிபர் அஸ்ரஃப் கானுடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வியாழக்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில்,
உஸ்பெகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமைச்சர் ஜெய்சங்கர், அங்கு ஆப்கன் அதிபரை சந்தித்து, ஆப்கானிஸ்தானில் நிலவி வரும் தலிபான்கள் தாக்குதல் குறித்து கேட்டறிந்தார்.
பின், ஆப்கானிஸ்தானில் அமைதி திரும்புவதற்கும், வளர்ச்சிக்கும் இந்தியா ஆதரவாக இருக்கும் என்பதை தெரிவித்துள்ளார்.
சுமார் 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தான் ராணுவம், தலிபான்கள் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் ராணுவத்திடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு அமெரிக்கப் படையினர் வெளியேறி வரும் இந்தச் சூழலில், தலிபான்கள் நாட்டின் நிலப்பரப்புகளை வேகமாகக் கைப்பற்றி வருகின்றனர்.
தற்போது அவர்களது கட்டுப்பாட்டில் எத்தனை மாவட்டங்கள் உள்ளன என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை. எனினும், அந்த நாட்டின் 421 மாவட்டங்களில் மூன்றில் ஒரு பகுதி தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதில் ஏராளமான மாவட்டங்கள் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த ஈரான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளுடனான எல்லைப் பகுதியாகும்.