கரோனா மூன்றாம் அலையை தடுக்க உரிய நடவடிக்கைகளை மாநில அரசுகள் எடுக்க வேண்டுமென முதல்வர்களுடனான ஆலோசனையில் பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை குறைந்து வரும் சூழலில்,சில மாவட்டங்களில் மட்டும் மீண்டும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், தென் மாநிலங்களான கேரளம், தமிழகம், மகாராஷ்டிரம், கர்நாடகம், ஆந்திரம் மற்றும் ஒடிசா மாநில முதல்வர்களுடன் இன்று காலை 11 மணியளவில் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனையில் பிரதமர் மோடி பேசியதாவது,
கடந்த சில நாள்களாக மொத்த பாதிப்புகளில் 80 சதவீதம் 6 மாநிலங்களிலிருந்து பதிவாகிறது. அதிக பாதிப்புகள் ஏற்படும் மாநிலங்கள் கரோனா மூன்றாம் அலையை தடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பரிசோதனை, சிகிச்சை, தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவு படுத்த வேண்டும்.
கரோனா அவசர கால நிதியாக மத்திய அரசு ரூ. 23,000 கோடி ஒதுக்கியுள்ளது. அந்த நிதியை பயன்படுத்தி மாநிலங்களில் பொது சுகாதாரத்துறை, மருத்துவ உள்கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். அதே சமயம், கிராமப்புறங்களையும் கண்காணிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.