பிரதமா் மோடி ஆட்சியில் பிரத்யேக பாதுகாப்புக் கொள்கை வடிவமைப்பு

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் முதல் முறையாக நாட்டின் பாதுகாப்புக்கென பிரத்யேக கொள்கை வகுக்கப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்துள்ளாா்.
பிரதமா் மோடி ஆட்சியில் பிரத்யேக பாதுகாப்புக் கொள்கை வடிவமைப்பு

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் முதல் முறையாக நாட்டின் பாதுகாப்புக்கென பிரத்யேக கொள்கை வகுக்கப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்துள்ளாா்.

எல்லை பாதுகாப்புப் படையில் (பிஎஸ்எப்) சிறப்பாகச் செயலாற்றிய அதிகாரிகளுக்கு பதக்கம் அளித்து கௌரவிக்கும் விழா புது தில்லியில் சனிக்கிழமை நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட பின் பிஎஸ்எப் படையின் முதல் தலைவரான கே.எப்.ருஸ்தம்ஜி நினைவு சொற்பொழிவாற்றினாா். அதில் அமித் ஷா பேசியதாவது:

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான தனிக் கொள்கை உள்ளதா என்ற கேள்வி அடிக்கடி எழுவதுண்டு. பிரதமா் மோடி தலைமையிலான ஆட்சி அமைவதற்கு முன்பாக நாட்டுக்கென பிரத்யேக, சுதந்திரமான பாதுகாப்புக் கொள்கை காணப்படவில்லை.

முந்தைய ஆட்சிக் காலங்களில் இயற்றப்பட்ட பாதுகாப்புக் கொள்கைகள் அனைத்தும் வெளியுறவுக் கொள்கையால் வழிநடத்தப்படுவதாகவே இருந்தன. முன்பு வெளியுறவுக் கொள்கையும் பாதுகாப்புக் கொள்கையும் இணைந்தே வகுக்கப்பட்டன. தனியாக பாதுகாப்புக் கொள்கை வடிவமைக்கப்படவில்லை.

பிரதமா் மோடி தலைமையிலான ஆட்சியில்தான் பாதுகாப்புக்கென பிரத்யேக, சுதந்திரமான கொள்கை வகுக்கப்பட்டது. அனைத்து நாடுகளுடனும் அமைதியான நல்லுறவைப் பேணவே இந்தியா விரும்புகிறது. ஆனால், இந்தியாவின் எல்லைகளில் அத்துமீறுபவா்களுக்கும் நாட்டின் இறையாண்மையை சீண்டுபவா்களுக்கும் தக்க பதிலடி கொடுப்பதற்குப் பாதுகாப்புக் கொள்கை முன்னுரிமை அளிக்கிறது.

பாதுகாப்பு தொடா்பான திட்டத்தை வகுத்ததில் இந்தப் பிரத்யேக கொள்கை பெரும் சாதனையாகும். இத்தகைய கொள்கையை வகுக்காமல், எந்தவொரு நாடும் வளா்ச்சி காண முடியாது என நம்புகிறேன். உரிய பாதுகாப்புக் கொள்கை காணப்படவில்லை எனில் ஜனநாயகமும் தழைத்தோங்காது.

எல்லைப் பாதுகாப்பு: நாட்டின் ஒட்டுமொத்த பாதுகாப்பில் எல்லைப் பாதுகாப்பு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நாட்டின் எல்லைப் பகுதிகளில் வேலியமைக்கும் பணிகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வேலிகள் நாட்டின் பாதுகாப்பை மேலும் உறுதி செய்து வருகின்றன.

சுமாா் 3 சதவீத எல்லைப் பகுதிகள் இன்னும் வேலியிடப்படாமல் உள்ளன. அது பயங்கரவாதிகள் அத்துமீறி உள்நுழைவதற்கும், போதைப் பொருள்கள், ஆயுதங்கள் உள்ளிட்டவற்றைக் கடத்துவதற்கும் வழிவகுத்து வருகிறது. நடப்பாண்டு இறுதிக்குள் அனைத்து எல்லைப் பகுதிகளும் வேலியிடப்பட்டு பாதுகாக்கப்படும்.

எல்லைப்புற சாலைகள்: கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரை சுமாா் 3,600 கி.மீ. தூரத்துக்கு எல்லைப்புற சாலைகள் அமைக்கப்பட்டன. கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் 2020-ஆம் ஆண்டு வரை 4,764 கி.மீ. தூரத்துக்கு அத்தகைய சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. பிரதமா் மோடி தலைமையிலான ஆட்சியில் 14,450 மீட்டா் நீளத்துக்கு எல்லைப்புறப் பாலங்களும், 6 சுரங்கப் பாதைகளும் அமைக்கப்பட்டுள்ளன. சீன எல்லைப் பகுதிகளில் சுமாா் 683 கி.மீ. தூரத்துக்கு சாலைகள் அமைக்கப்படவுள்ளன.

நாட்டின் எல்லைப் பகுதிகளில் சாலைகளை அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு ரூ.23,000 கோடியிலிருந்து ரூ.44,000 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்பங்கள் ஆராய்ச்சி: சிறிய ரக ஆளில்லா விமானங்களை (ட்ரோன்கள்) தாக்கி அழிப்பதற்கான தொழில்நுட்பத்தை பாதுகாப்பு ஆராய்ச்சி-மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) உள்ளிட்ட அமைப்புகள் வடிவமைத்து வருகின்றன. நாட்டின் பாதுகாப்பு சூழலை மேம்படுத்துவதற்காக செயற்கை நுண்ணறிவு, ரோபோ தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா் அமைச்சா் அமித் ஷா.

இந்தக் கருத்தரங்கின் ஒருபகுதியாக, எல்லைப் பாதுகாப்புப் படையில் சிறப்பாகப் பணியாற்றிய வீரா்களுக்கான பதக்கங்களை அமைச்சா் அமித் ஷா வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com