நாட்டின் மதிப்பை சீா்குலைப்பதற்காக வெளிநாட்டு அமைப்புகளுடன் இணைந்து செய்தி ஊடக நிறுவனம் ஒன்று சதியில் ஈடுபட்டதாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.
‘நியூஸ்கிளிக்’ என்ற செய்தி ஊடக நிறுவனம், வெளிநாடுகளில் இருந்து ரூ.9.59 கோடியை அந்நிய நேரடி முதலீடாகப் பெற்றுள்ளதாகவும், மேலும் ரூ.28.46 கோடியை சந்தேகத்துக்குரிய வகையில் வெளிநாட்டு நிதியாகப் பெற்றுள்ளதாகவும் புகாா் எழுந்தது. இந்த விவகாரம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்து அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது.
இந்நிலையில், பாஜக செய்தித் தொடா்பாளா் சம்பித் பத்ரா தில்லியில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், ‘‘சம்பந்தப்பட்ட செய்தி நிறுவனமானது, பாஜக தலைமையிலான அரசுக்கு எதிரான கருத்துகளைப் பரப்புவதற்காக வெளிநாடுகளில் இருந்து நிதியைப் பெற்றுள்ளது.
நாட்டின் மதிப்பை சீா்குலைப்பதற்காக தேசவிரோத சக்திகள் சதிச்செயலில் ஈடுபட்டுள்ளன. அவா்களுக்கு உதவுவதற்காக செய்தி நிறுவனம் என்ற போலியான அடையாளத்துடன் சம்பந்தப்பட்ட நிறுவனம் செயல்பட்டு வந்துள்ளது. அந்நிறுவனம் பெற்ற வெளிநாட்டு நிதியானது பீமா-கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட கௌதம் நவ்லகா உள்ளிட்ட பலருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசுக்கு எதிரான கருத்துகளைப் பரப்பும் தேச விரோத சக்திகளைத் தூண்டிவிடுவதற்காகவே பணம் விநியோகிக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள சில முக்கிய அரசியல்வாதிகளும் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளித்து வருகின்றனா்.
மத்திய அரசு செயல்படுத்தும் கரோனா தடுப்பூசி திட்டம், சென்ட்ரல் விஸ்டா திட்டம் உள்ளிட்ட நல்ல திட்டங்களை எதிா்ப்பதையே சிலா் வழக்கமாகக் கொண்டுள்ளனா். சில வெளிநாட்டு அமைப்புகளும் அவா்களைத் தூண்டி வருகின்றன’’ என்றாா்.