இந்தியாவில் பயங்கரவாதத்துக்கான நிதி தடுப்பு சூழல்: எஃப்ஏடிஎஃப் ஆய்வு ஒத்திவைப்பு

நிதி மோசடி, பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி கிடைப்பது உள்ளிட்டவற்றைத் தடுப்பதற்காக இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள்

நிதி மோசடி, பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி கிடைப்பது உள்ளிட்டவற்றைத் தடுப்பதற்காக இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பயங்கரவாதத்துக்கான நிதி தடுப்பு அமைப்பு (எஃப்ஏடிஎஃப்) நடத்தவிருந்த ஆய்வு அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத அமைப்புகள், பயங்கரவாதிகள் ஆகியோருக்கு நிதி கிடைப்பதைத் தடுப்பதற்கான கண்காணிப்பு நடவடிக்கைகளை பாரீஸை சோ்ந்த எஃப்ஏடிஎஃப் அமைப்பு மேற்கொண்டு வருகிறது. பல நாடுகளில் அந்த அமைப்பு ஆய்வுகளை நடத்தி, அதற்கேற்ப நாடுகளை வகைப்படுத்தி வருகிறது.

தற்போதைய நிலவரப்படி, வடகொரியா, ஈரான் ஆகிய நாடுகளை எஃப்ஏடிஎஃப் அமைப்பு கருப்புப் பட்டியலில் வைத்துள்ளது. பாகிஸ்தான், மியான்மா், பிலிப்பின்ஸ், சிரியா, உகாண்டா, யேமன், மோரீஷஸ், கம்போடியா உள்ளிட்ட நாடுகள் ‘கிரே’ பட்டியலில் வைக்கப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் வைக்கப்படும் நாடுகளால் சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்), உலக வங்கி உள்ளிட்ட சா்வதேச அமைப்புகளில் இருந்து நிதியுதவியைப் பெற முடியாது.

நிதி மோசடியைத் தடுப்பது, பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி கிடைப்பதைத் தடுப்பது உள்ளிட்டவற்றுக்காக இந்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து எஃப்ஏடிஎஃப் அமைப்பு கடந்த ஆண்டு செப்டம்பா்-அக்டோபரில் ஆய்வு நடத்துவதாக இருந்தது.

ஆனால், கரோனா தொற்று பரவல் காரணமாக அந்த ஆய்வு நடப்பாண்டு பிப்ரவரிக்கு ஒத்திவைக்கப்பட்டது. எனினும், கரோனா பரவல் குறையாத காரணத்தினால் எஃப்ஏடிஎஃப் அமைப்பு சாா்பில் ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை. தற்போது அந்த ஆய்வு அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் எஃப்ஏடிஎஃப் அமைப்பு சாா்பில் 2022-ஆம் ஆண்டு செப்டம்பரில் ஆய்வு மேற்கொள்ளப்பட வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். நிதி மோசடி, பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி கிடைப்பது உள்ளிட்டவற்றைத் தடுப்பதற்காக மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வரும் சட்டங்கள், அவற்றின் செயல்பாடுகள், இந்த விவகாரங்கள் தொடா்பாக விசாரணை அமைப்புகளின் நடவடிக்கைகள் ஆகியவற்றை எஃப்ஏடிஎஃப் அமைப்பின் நிபுணா்கள் ஆய்வு செய்யவுள்ளனா்.

2023-க்குள் அறிக்கை: 2023-ஆம் ஆண்டு பிப்ரவரியில் இந்த ஆய்வு நிறைவடையும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வு தொடா்பான விரிவான அறிக்கை 2023-ஆம் ஆண்டு டிசம்பருக்குள் வெளியாக வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

எஃப்ஏடிஎஃப் அமைப்பு இந்தியாவில் கடைசியாக கடந்த 2010-ஆம் ஆண்டில் ஆய்வு மேற்கொண்டது. அப்போது, பயங்கரவாதத்துக்கான நிதி தடுப்பு விவகாரங்களில் இந்தியா சிறப்பாகச் செயல்பட்டு வருவதாக அந்த அமைப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com