கட்சி தலைமை என்ன சொல்கிறதோ அதை பின்பற்றுவேன் என கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
பாஜகவின் மூத்த தலைவர் எடியூரப்பா கர்நாடக முதல்வராக நான்காவது முறையாக பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவுபெறவுள்ளது. பாஜகவில் 75 வயதுக்கு மேலானவர்கள் அரசியல் பதவி வகிக்கக் கூடாது என்பது எழுதப்படாத விதி. இருப்பினும், எடியூரப்பாவுக்கு மட்டும் அதில் விலக்கு அளிக்கப்பட்டது.
இதனிடையே, இந்த மாத இறுதியில் எடியூரப்பா ராஜிநாமா செய்வார் என தகவல் வெளியானது. இருப்பினும், ராஜிநாமா குறித்த செய்திகளை எடியூரப்பா மறுத்துவந்தார். இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த எடியூரப்பா, "75 வயதுக்கு மேலான யாருக்கும் பாஜக அரசியல் பதவி வழங்குவதில்லை. என்னை தவிர.
பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் நட்டா ஆகியோர் என் மீது தனிப்பட்ட அக்கறை கொண்டு எனக்கு முதலமைச்சர் பதவி வழங்கினர்.
ஜூலை 26ஆம் தேதியோடு நான் பதவியேற்று இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. கட்சி தலைமை என்ன சொல்கிறதோ அதை பின்பற்றுவேன். கட்சியை வலுப்படுத்த தொடர் கவனம் செலுத்துவேன். கட்சி தொண்டர்கள் இதை மீறி எதையும் செய்ய வேண்டாம்" என்றார்.
எடியூரப்பாவுக்கு எதிராக சொந்த கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்களே போர்கொடி தூக்கியது கடந்த சில நாள்களாக பரபரப்பைக் கிளப்பியது. குறிப்பாக, எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா கட்சியிலும் ஆட்சியிலும் தலையிட்டுவருவதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.
மூத்த தலைவர்களுடன் பல மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையில் தனது மகன்களுக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்து தர தலைமை உறுதி அளித்ததைத் தொடர்ந்து ராஜிநாமா செய்ய அவர் ஒப்புக்கொண்டுள்ளார் எனக் கூறப்படுகிறது. மேலும், ஆந்திரத்தின் ஆளுநராக அவரை நியமிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.