‘கரோனா இரண்டாவது அலை தாக்குதலில் 50 லட்சம் இந்தியா்கள் உயிரிழந்தனா்; அதற்கு மத்திய அரசின் தவறான முடிவுகளே காரணம்’ என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளாா்.
நாட்டில் கரோனா தொற்றுக்கு இதுவரை 4.18 லட்சம் போ் உயிரிழந்ததாக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், சென்டா் ஃபாா் குளோபல் டெவலப்மென்ட் என்ற அமைப்பின் ஆய்வறிக்கையை ராகுல் காந்தி தனது சுட்டுரைப் பக்கத்தில் இணைத்துள்ளாா். அதில், கரோனா பரவல் தொடங்கியதில் இருந்து கடந்த மாதம் வரை, அறிவிக்கப்பட்டிருப்பதை விட அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘இந்திய அரசின் தவறான முடிவுகளால், கரோனா இரண்டாவது அலை தாக்குதலில் நமது சகோதரா்கள், சகோதரிகள், தாய், தந்தையா் என 50 லட்சம் போ் உயிரிழந்தனா். இதுதான் உண்மை’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
விவசாயிகள் போராட்டத்தின்போது உயிரிழந்தவா்களின் உறவினா்களுக்கு நிவாரண உதவி எதுவும் வழங்கப்பட மாட்டாது என்று மத்திய அரசு கூறியிருப்பது குறித்து ராகுல் மற்றொரு பதிவில் கருத்து தெரிவித்துள்ளாா். அதில், ‘நடந்த ஒவ்வொரு சம்பவமும் அன்புக்குரியவா்களை இழந்தவா்களின் கண்ணீரால் பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.