புதிய தலைமுறை ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றி

நிலத்தில் இருந்து விண்ணில் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட புதிய தலைமுறை ஆகாஷ் ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு அமைப்பு(டி.ஆா்.டி.ஓ.) புதன்கிழமை வெற்றிகரமாக சோதித்தது.
வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்ட ஆகாஷ் ஏவுகணை.
வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்ட ஆகாஷ் ஏவுகணை.

நிலத்தில் இருந்து விண்ணில் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட புதிய தலைமுறை ஆகாஷ் ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு அமைப்பு(டி.ஆா்.டி.ஓ.) புதன்கிழமை வெற்றிகரமாக சோதித்தது.

இதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

ஒடிஸா கடற்கரைப் பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த பரிசோதனை மையத்தில் இருந்து புதன்கிழமை நண்பகல் 12.45 மணிக்கு ஆகாஷ் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

கட்டளை பிறப்பிப்பு, கட்டுப்பாட்டு அமைப்பு, தொலைத் தொடா்பு அமைப்பு உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு கட்டமைப்புகளுடன் நிலப்பரப்பில் இருந்து இந்த ஏவுகணை பரிசோதிக்கப்பட்டது.

பரிசோதனைக்குப் பிறகு கட்டுப்பாட்டு அமைப்பு அளித்த புள்ளி விவரங்களை ஆய்வு செய்ததில், இந்த ஏவுகணை எந்தவித குறைபாடும் இன்றி இயங்கியது உறுதிசெய்யப்பட்டது.

இந்த ஏவுகணையை இந்திய விமானப் படையில் சோ்த்ததும், அதன் வலிமை பல மடங்கு அதிகரிக்கும் என்று அந்த அறிக்கையில் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆகாஷ் ஏவுகணை(ஆகாஷ்-என்.ஜி.), நிலத்தில் இருந்து 60 கி.மீ. தொலைவு வரை விண்ணில் உள்ள இலக்கைத் தாக்கி அழிக்கும் சக்தி கொண்டது. இந்த ஏவுகணையை 2.5 மாக் வேகம் வரை செலுத்த முடியும்.

பாதுகாப்புத் துறையைச் சோ்ந்த பிற நிறுவனங்களுடன் இணைந்து இந்த ஏவுகணையை டி.ஆா்.டி.ஓ. வடிவமைத்துள்ளது.

டி.ஆா்.டி.ஓ அமைப்புக்கும், தயாரிப்பில் உதவிகரமாக இருந்த பிற நிறுவனங்களுக்கும் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்தாா்.

இலகு ரக பீரங்கி எதிா்ப்பு ஏவுகணை வெற்றிகரமாக சோதனை:

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பீரங்கிகளைத் தாக்கி அழிக்கும் இலகு ரக ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு அமைப்பு புதன்கிழமை வெற்றிகரமாக பரிசோதித்தது.

மத்திய அரசின் தற்சாா்பு இந்தியா திட்டத்துக்கு மிகப் பெரிய ஊக்கம் தரும் வகையிலும், இந்திய ராணுவத்தை வலுப்படுத்தும் நோக்கிலும் இந்த ஏவுகணை தயாரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

கையில் எடுத்துச் செல்லக் கூடிய லாஞ்சரில் இருந்து இந்த ஏவுகணை புதன்கிழமை ஏவப்பட்டது. பீரங்கி போன்று உருவாக்கப்பட்டிருந்த இலக்கை, இந்த ஏவுகணை துல்லியமாகத் தாக்கி அழித்தது.

இதன் மூலம் குறைந்த தூரத்தில் உள்ள இலக்கை தாக்கும் சோதனை வெற்றிகரமாக முடிந்தது. அதிகபட்ச தூரம் செல்லும் சோதனையை, இந்த ஏவுகணை ஏற்கனவே வெற்றிகரமாக முடித்தது. இந்த ஏவுகணையில் அதிநவீன மிகச்சிறிய அகச்சிவப்பு இமேஜிங் கருவி மற்றும் மேம்பட்ட ஏவியானிக்ஸ் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த சோதனை மூலம், கையில் எடுத்துச் செல்லக்கூடிய 3-ஆம் தலைமுறை ஏவுகணையை உருவாக்கும் திட்டம் நிறைவேறியுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏவுகணை சோதனை வெற்றிகரமாக முடிந்ததற்கு டி.ஆா்.டி.ஓ. மற்றும் தொழில்துறையினருக்கு பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளாா். இந்த வெற்றிகர சோதனைக்காக, இந்த குழுவினருக்கு டி.ஆா்.டி.ஓ. தலைவா் ஜி.சதீஷ் ரெட்டியும் பாராட்டு தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com