ஜம்முவில் வெள்ளிக்கிழமை அதிகாலை வெடிமருந்துடன் நுழைந்த டிரோனை காவல்துறையினர் சுட்டு வீழ்த்தியதால் பெரும் விபத்து தடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச எல்லைப் பகுதியிலிருந்து 6 கி.மீ. தொலைவில் கன்ஜக் என்ற பகுதியில் இன்று அதிகாலை 1 மணியளவில் டிரோன் பறந்துள்ளது. இதைக் கண்ட காவல்துறையினர் டிரோனை நோக்கி சுட்டதில், செயலிழந்து கீழே விழுந்தது. அந்த டிரோனிலிருந்து 5 கிலோ எடையுள்ள வெடிபொருளை கைப்பற்றினர்.
இதுகுறித்து ஜம்முவின் காவல்துறை துணைத் தலைவர் முகேஷ் சிங் கூறியதாவது,
இன்று அதிகாலை 1 மணியளவில் டிரோன் கண்டறியப்பட்டது. அந்த டிரோன் கீழ் நோக்கி தாக்குதல் நடத்த வரும்போது காவல்துறையினர் சுட்டு வீழ்த்தினர். அதிலிருந்து வெடிக்க தயாராக இருந்த 5 கிலோ எடையுள்ள ஐஇடி வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டது. இதன்மூலம் பெரும் தாக்குதல் தடுக்கப்பட்டுள்ளது என்றார்.
சுதந்திர தினத்தன்று தில்லியில் டிரோன் மூலம் தாக்குதல் நடத்த அச்சுறுத்தல் உள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ள நிலையில், இந்த தாக்குதல் முயற்சியால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கடந்த ஜூன் 27ஆம் தேதி, ஜம்முவில் சர்வதேச எல்லைக் கோட்டுப் பகுதிக்கு அருகே ஜம்மு மாவட்டத்தில் டிரான்கள் பறந்துவந்து இந்திய விமானப் படைத் தளத்தின் அலுவலகக் கட்டடத்தை சேதப்படுத்தின. இதில் இரண்டு பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து தேசிய நுண்ணறிவுப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.