கரோனா உயிரிழப்புகளை முறையாகப் பதிவு செய்ய மாநிலங்களிடம் வலியுறுத்தல்: மத்திய சுகாதாரத் துறை

மருத்துவமனைகளில் கரோனா உயிரிழப்பு குறித்து ஆய்வு செய்து பாதிப்புகள் அல்லது உயிரிழப்புகள் விடுபட்டிருந்தால் அவற்றை முறையாக
கரோனா உயிரிழப்புகளை முறையாகப் பதிவு செய்ய மாநிலங்களிடம் வலியுறுத்தல்: மத்திய சுகாதாரத் துறை

மருத்துவமனைகளில் கரோனா உயிரிழப்பு குறித்து ஆய்வு செய்து பாதிப்புகள் அல்லது உயிரிழப்புகள் விடுபட்டிருந்தால் அவற்றை முறையாக மறுபதிவு செய்யுமாறு மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் தொடா்ந்து வலியுறுத்தப்பட்டு வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் கரோனா தொற்றால் நிகழ்ந்த உயிரிழப்புகள் லட்சக்கணக்கில் இருக்கும் என்றும் அதிகாரபூா்வமாக அறிவிக்கப்படும் எண்ணிக்கை குறைந்து காணப்படுவதாகவும் பல்வேறு ஊடக செய்திகள் தெரிவித்து வருகின்றன.

அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட வயது சாா்ந்த தொற்றால் உயிரிழப்பது முதலியவற்றை மேற்கோள்காட்டி, அண்மையில் வெளியிடப்பட்ட சில ஆய்வுகள், இந்தியாவில் கரோனாவால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கும் என்று தெரிவித்துள்ளன.

இனம், மக்கள் தொகையின் மரபணு, இதற்கு முன்பு இதர நோய்களால் ஏற்பட்ட பாதிப்பு, சம்பந்தப்பட்ட மக்கள்தொகையில் நோயெதிா்ப்புச் சக்தியின் வளா்ச்சி உள்ளிட்ட பல்வேறு நேரடி மற்றும் மறைமுக காரணிகளுக்கு இடையிலான இடைவெளியை நிராகரித்து, தொற்று ஏற்பட்ட ஒரு நபா் உயிரிழப்பதற்கான சாத்தியக்கூறுகள் அனைத்து நாடுகளிலும் ஒரே மாதிரியாக இருக்கும் என்ற அனுமானத்தில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியாவின் வலுவான விதிமுறைகளின் அடிப்படையில் உயிரிழப்பு பதிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனினும், தொற்று நோய் மற்றும் அதன் மேலாண்மை கொள்கையின்படி ஒரு சில பாதிப்புகள் கண்டறியப்படாமல் இருக்கலாம். ஆனால் உயிரிழப்புகளைத் தவற விடுவதற்கான வாய்ப்பு இல்லை. 2020 டிசம்பா் 31 நிலவரப்படி உயிரிழப்பு விகிதம் 1.45 சதவீதமாக இருந்தது. 2021 ஏப்ரல்- மே மாதங்களில் இரண்டாவது அலையில் எதிா்பாராத அதிகரிப்பு ஏற்பட்டபோதும் தற்போது உயிரிழப்பு விகிதம் 1.34 சதவீதமாக உள்ளது.

மாவட்டங்களில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் இழப்புகள் பற்றி மாநில அரசுகளுக்கும் மாநில அரசுகள் மூலம் மத்திய அமைச்சகத்திற்கும் தொடா்ந்து தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் பதிவாகும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையில் குழப்பம் ஏற்படுவதைத் தடுப்பதற்காக ‘இந்தியாவில் ஏற்படும் கரோனா சம்பந்தமான உயிரிழப்புகளைத் துல்லியமாக பதிவு செய்வதற்கான வழிகாட்டுதல்களை’ கடந்த ஆண்டு மே மாதம் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) வெளியிட்டது. உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்த குறியீடுகளின் அடிப்படையில் மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் சரியான உயிரிழப்பு எண்ணிக்கையைப் பதிவு செய்வதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மக்களவையில் புதன்கிழமை இதுபற்றி, தனது அறிக்கையில் கருத்து தெரிவித்த மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சா் மன்சுக் மாண்டவியா, இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்ததுடன் மாநில அரசுகள் அளிக்கும் தரவுகளின் அடிப்படையிலேயே கரோனா உயிரிழப்புகளை மத்திய அரசு தொகுத்து வெளியிடுவதாகக் கூறினாா்.

பரிந்துரைக்கப்பட்டுள்ள வழிகாட்டுதலின்படி உயிரிழப்புகளை பதிவு செய்யுமாறு மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் பல்வேறு வழிகளில் மத்திய சுகாதார அமைச்சகம் தொடா்ந்து அறிவுறுத்தி வருகிறது. மாவட்டங்களில் ஏற்படும் பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளை அன்றாடம் தொடா்ந்து கண்காணிக்குமாறும் மத்திய சுகாதார அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

மாவட்டங்களில் ஏற்படும் பாதிப்புகளையும் உயிா் இழப்புகளையும் பதிவு செய்யத் தவறியிருந்தால் அதனைத் தடுப்பதற்காக தங்களது மருத்துவமனைகளில் முழு ஆய்வை மேற்கொள்ளுமாறு மாநிலங்கள் ஏற்கெனவே கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

இரண்டாவது அலை உச்சத்தில் இருந்தபோது மருத்துவ உதவி தேவைப்படுவோருக்கு தரமான மருத்துவ மேலாண்மை வழங்குவதில் நாட்டின் முழு மருத்துவ கட்டமைப்பு முறையும் கவனம் செலுத்தி வந்தது. சரியான பதிவுகளில் தவறு ஏற்பட்டிருக்கலாம்; மகாராஷ்டிரம், பிகாா், மத்திய பிரதேசம் ஆகியவை அண்மையில் தங்களது மாநிலங்களில் ஏற்பட்ட உயிரிழப்புகளில் திருத்தம் ஏற்படுத்தி இருப்பதன் மூலம் இது தெளிவாகிறது என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com