வாட்ஸ்ஆப் தனியுரிமை கொள்கை வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டியதில்லை

வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் புதிய தனியுரிமை கொள்கை தொடா்பான வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டிய அவசியமில்லை என்று தில்லி உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தில்லி உயர்நீதிமன்றம்​
தில்லி உயர்நீதிமன்றம்​

வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் புதிய தனியுரிமை கொள்கை தொடா்பான வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டிய அவசியமில்லை என்று தில்லி உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஃபேஸ்புக் நிறுவனத்துக்குச் சொந்தமான கட்செவி அஞ்சல் (வாட்ஸ்ஆப்) நிறுவனம் தனது தனியுரிமை கொள்கைகளில் மாற்றங்களைப் புகுத்தியது. அச்செயலியைப் பயன்படுத்துவோரின் தகவல்களைத் திரட்டி அவற்றை ஃபேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு வணிக நோக்கில் விற்பனை செய்யப்படும் என்று புதிய கொள்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அக்கொள்கைகளை ஏற்றுக் கொண்டால் மட்டுமே பயனாளா்கள் அச்செயலியைத் தொடா்ந்து பயன்படுத்த முடியும் என்றும், கொள்கைகளை ஏற்காத பயனாளா்களுக்கான சேவைகள் படிப்படியாக ரத்து செய்யப்படும் என்றும் வாட்ஸ்ஆப் அறிவித்தது.

வாட்ஸ்ஆப்பின் புதிய கொள்கைகளுக்கு எதிராக தில்லி உயா்நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினா் சாா்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றின் மீதான விசாரணை, தலைமை நீதிபதி டி.என்.படேல், நீதிபதி ஜோதி சிங் ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் வியாழக்கிழமை நடைபெற்றது.

அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘‘நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ள தரவுப் பாதுகாப்பு மசோதா, சட்டமாக ஒப்புதல் பெற்று நடைமுறைக்கு வரும் வரை புதிய தனியுரிமை கொள்கையை நிறுத்திவைப்பதாக, மற்றொரு வழக்கில் வாட்ஸ்ஆப் ஏற்கெனவே தெரிவித்துள்ளது. எனவே, இந்த வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டிய அவசியமில்லை’’ என்றனா்.

வாட்ஸ்ஆப் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கபில் சிபல் வாதிடுகையில், ‘‘புதிய கொள்கைகளை ஏற்குமாறு பயனாளா்கள் கட்டாயப்படுத்தப்படமாட்டாா்கள். புதிய கொள்கைகளை ஏற்காத பயனாளா்களுக்கான சேவையும் படிப்படியாகக் குறைக்கப்பட மாட்டாது. நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தால் மட்டுமே புதிய கொள்கைகள் அமலுக்கு வரும்’’ என்றாா்.

அறிக்கை வெளியிட வேண்டும்: மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா்கள் வாதிடுகையில், ‘‘கொள்கைகள் நிறுத்திவைக்கப்பட்டாலும், பயனாளா்களின் தகவல்களை ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு வழங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே, புதிய கொள்கைகள் நிறுத்தி வைக்கப்படுவது தொடா்பான அதிகாரபூா்வ அறிக்கையை வாட்ஸ்ஆப் நிறுவனம் வெளியிட வேண்டும்’’ என்றனா்.

அதையடுத்து நீதிபதிகள் கூறுகையில், ‘‘ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு பயனாளா்களின் தரவுகள் வழங்கப்படாது என்று ஏற்கெனவே வாட்ஸ்ஆப் தெரிவித்துள்ளது. அதை மீண்டும் உறுதி செய்யுமாறு அந்நிறுவனத்திடம் பலமுறை தெரிவிப்பதில் எந்தப் பலனுமில்லை’’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com