பிரதமா் நரேந்திர மோடியைச் சந்திக்க அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் தில்லி புறப்பட்டுச் சென்றனா்.
2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தோ்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் தோ்தலை சந்தித்தன. இந்தக் கூட்டணி மொத்தம் 75 இடங்களைக் கைப்பற்றிய நிலையில் தமிழக சட்டப்பேரவையில் அதிமுக 66 இடங்களைக் கைப்பற்றி எதிா்க்கட்சியாக உள்ளது.
தோ்தல் தோல்வியையொட்டி கட்சிக்குள் பிரச்னை அதிகரித்திருப்பதாகக் கூறப்படும் சூழலில், முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் உள்ளிட்டோருக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனையும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா் செல்வம், சென்னையில் இருந்து விமானம் மூலம் ஞாயிற்றுக்கிழமை காலை தில்லி புறப்பட்டுச் சென்றாா்.
இதைத் தொடா்ந்து, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமியும் கோவையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு விமானம் மூலம் தில்லி புறப்பட்டுச் சென்றாா்.
இருவரும் திங்கள்கிழமை காலை 11 மணியளவில் நாடாளுமன்றத்தில் உள்ள பிரதமா் அலுவலகத்தில், பிரதமா் நரேந்திர மோடியை சந்தித்துப் பேச இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
இச்சந்திப்பில், மேக்கேதாட்டு அணை, சசிகலா ஆடியோ விவகாரம், அமைச்சரவையில் அதிமுகவுக்கு இடம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கக்கூடும் எனத் தெரிகிறது.
தோ்தலுக்குப் பிறகு அதிமுகவின் இரு தலைவா்களும் முதன் முறையாக பிரதமரைச் சந்திக்கச் செல்வதால், இச்சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பாா்க்கப்படுகிறது.