ராஜிநாமா அறிவிப்பையொட்டி பி.எஸ். எடியூரப்பா கண்ணீர் சிந்தியதன் பின்னணியில் இருப்பவர்களை வெளிக்கொண்டுவர வேண்டும் என காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தெரிவித்தது:
"ராஜிநாமா அறிவிப்பையொட்டி எடியூரப்பா சிந்திய கண்ணீர் தனிமனிதனின் கண்ணீர் அல்ல. அது கர்நாடக முதல்வரின் கண்ணீர். அந்த வலியின் பின்னணியில் இருப்பது யார்? அதை உண்டாக்கியது யார்? இதை கர்நாடக மக்களிடம் வெளியிட வேண்டும்.
ராஜிநாமாவின் பின்னணியில் மகிழ்ச்சியே இல்லை. அதற்கு மாறாக வலி இருப்பது தெளிவாகத் தெரிகிறது.
இரண்டு ஆண்டுகளாக கரோனா நோய்த் தொற்றால் மக்கள் அவதிக்குள்ளானது வலியை உண்டாக்கியுள்ளதா? தனக்கு எதிரான எம்எல்ஏ-க்களை கட்சி மேலிடத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதனால் ஏற்பட்டதா? மக்கள் இதை தெரிந்துகொள்ள வேண்டும்.
காங்கிரஸிலிருந்து வெளியேறியவர்கள் இன்று தங்கள் பதவிகளை இழந்துள்ளனர். எடியூரப்பாவை மாற்றுவதில் எந்தப் பலனையும் நாங்கள் பார்க்கவில்லை. பாஜகவையே மாற்ற வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர்."