கர்நாடக முதல்வராகப் பதவியேற்க அழைக்கும்படி ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து பசவராஜ் பொம்மை உரிமை கோரினார்.
கர்நாடக பாஜக சட்டப்பேரவைக் குழுக் கூட்டத்தில் முதல்வராக பசவராஜ் பொம்மை ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். இதன்பிறகு, ஆளுநர் மாளிகைக்குச் சென்று ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டைச் சந்தித்த பசவராஜ் பொம்மை, பாஜகவின் சட்டப்பேரவைக் குழு புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான கடிதத்தை அளித்தார். மேலும் தன்னை முதல்வராகப் பதவியேற்க அழைப்பு விடுக்கும்படியும் அவர் கேட்டுக்கொண்டார்.
அதை ஏற்றுக்கொண்ட ஆளுநர் தாவர்சந்த் கெலாட், புதிய முதல்வராகப் பதவியேற்க பசவராஜ் பொம்மைக்கு அழைப்பு விடுத்தார்.
இதைத் தொடர்ந்து, நாளை (புதன்கிழமை) காலை 11 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறுகிறது.
முன்னதாக, கர்நாடக முதல்வராக இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்த பி.எஸ். எடியூரப்பா திங்கள்கிழமை ராஜிநாமா செய்தார்.