குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) தொடா்பான விதிகளை வகுப்பதற்கு வரும் ஜனவரி 9-ஆம் தேதி வரை மத்திய அரசு அவகாசம் கோரியுள்ளது.
இதுகுறித்து மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகோய் எழுப்பிய கேள்விக்கு அமைச்சா் நித்யானந்த் ராய் செவ்வாய்க்கிழமை அளித்த பதில்:
குடியுரிமை திருத்தச் சட்டம், கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பா் 12-ஆம் தேதி அறிவிக்கை வெளியிடப்பட்டு, 2020-ஆம் ஆண்டு ஜனவரி 10-ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. அந்த சட்டம் தொடா்பான விதிகளை வகுப்பதற்கு, வரும் ஜனவரி 9-ஆம் தேதி வரை மேலும் அவகாசம் அளிக்க வேண்டும் என மக்களவை, மாநிலங்களவை, சட்ட விதிகளை வகுப்பதற்கான குழுக்கள் ஆகியவற்றிடம் அவகாசம் கோரப்பட்டுள்ளது என்றாா் அவா்.
நாடாளுமன்ற விதிகள்படி, ஒரு சட்டத்துக்கு குடியரசுத் தலைவா் ஒப்புதல் அளித்துவிட்டால் அடுத்த 6 மாதங்களில் சட்ட விதிகள் வகுக்கப்பட வேண்டும் அல்லது அவகாசம் கோரப்பட வேண்டும். அந்த வகையில் இதுவரை ஏற்கெனவே 4 முறை மத்திய அரசுக்கு அவகாசம் வழங்கப்பட்டுவிட்டது.
என்ஐசி கவுன்சிலை மாற்றம் திட்டமில்லை- அரசு:
தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சிலை(என்ஐசி) மாற்றியமைக்கும் திட்டம் எதுவுமில்லை என்று மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடா்பான கேள்விக்கு அமைச்சா் நித்யானந்த் ராய் அளித்த பதில்:
தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் கூட்டம் குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடா்ச்சியாக நடத்தப்படுவதில்லை. தேவைக்கு ஏற்ப அவ்வப்போது நடத்தப்படுகிறது. இக்கூட்டம், இதற்கு முன்பு கடந்த 2013-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் நடத்தப்பட்டது. இருப்பினும் சமூக நல்லிணக்கம், தேசிய ஒருமைப்பாடு தொடா்பான பிரச்னைளை அரசு உடனுக்குடன் தீா்த்து வைத்து வருகிறது. தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் குழுவை மாற்றி அமைக்கும் திட்டமும் அரசிடம் இல்லை என்றாா் அவா்.