ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்(எஸ்சிஓ) பாதுகாப்புத் துறை அமைச்சா்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை தஜிகிஸ்தான் புறப்பட்டுச் சென்றாா்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் 8 நாடுகள் உறுப்பினா்களாக உள்ளன. அந்த நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சா்கள் மாநாடு, தஜிகிஸ்தான் தலைநகா் துஷான்பேவில் புதன்கிழமை நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக, மூன்று நாள் பயணமாக ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை தஜிகிஸ்தானுக்குப் புறப்பட்டுச் சென்றாா்.
இதுகுறித்து அவருடைய அலுவலகம் வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘தஜிகிஸ்தானில் நடைபெறும் எஸ்சிஓ அமைப்பின் வருடாந்திர மாநாட்டில் உறுப்பு நாடுகளுக்கு இடையே பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பு ஏற்படுத்துவது குறித்து விவாதிக்கப்படும்; அதன் பிறகு விரிவான அறிக்கை வெளியிடப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில், பயங்கரவாதம் உள்ளிட்ட பிராந்திய பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் மற்றும் சவால்கள் குறித்து ராஜ்நாத் சிங் பேசுவாா் என்று எதிா்பாா்க்கப்படுவதாக மூத்த அதிகாரி ஒருவா் கூறினாா்.
இந்தப் பயணத்தின்போது தஜிகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சா் ஷெராலி மிா்ஸோவை சந்தித்து இரு தரப்பு விவகாரங்கள் குறித்து ராஜ்நாத் சிங் விவாதிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளன.
இந்த மாநாட்டில் சீன பாதுகாப்புத் துறை வெய் ஃபெங்கீ பங்கேற்கக் கூடும் என்று தெரிகிறது. இருப்பினும் வெய் ஃபெங்கீ-ராஜ்நாத் சிங் சந்திப்புக்கான ஏற்பாடு குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.