
தமிழகத்தில் 12,65,588 பெண்கள் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களில் பணிபுரிவதாக மத்திய தொழிலாளர்கள் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் ராமேஷ்வர் தெளி மக்களவையில் தெரிவித்துள்ளார்.
பெண் தொழிலாளர்கள் எண்ணிக்கை, அவர்கள் நலன் குறித்து மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து கரூர் மக்களவை காங்கிரஸ் உறுப்பினர் செ.ஜோதிமணி திங்கள்கிழமை எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய இணையமைச்சர் ராமேஷ்வர் தெளி எழுத்து மூலம் அளித்துள்ள பதில்:
2019-20 ஆண்டில், மத்திய புள்ளியியல், திட்டச் செயலாக்க அமைச்சகத்தின் தேசிய புள்ளியியல் அலுவலகம் நடத்திய தொழிலாளர் ஆற்றல் மதிப்பீடு கணக்கெடுப்பின்படி, இந்தியா முழுவதும் பணியிலிருப்பவர்களில் 30 சதவீதத்தினர் பெண்கள். தமிழ்நாட்டில் 40.2% பெண்கள் பணிசெய்து வருகின்றனர். அதிக அளவில் பெண்கள் பணியாற்றுவது ஹிமாசல பிரதேசம் (65 %). சிக்கிம், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களிலும் பெண்கள் அதிகமாக சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர். மிகக் குறைவாக பிகாரில் 9.5 சதவீதமும், உத்தர பிரதேசத்தில் 17.7 சதவீதம் மட்டுமே பெண்கள் பணியாற்றுகின்றனர்.
தமிழகத்தில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களில் 2021 ஜூலை 20-ஆம் தேதி வரை 15 வயதுக்கு மேலாக உள்ள பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கை 12,65,588 ஆகும். அதிக அளவாக சென்னை, திருப்பூர், கோவை ஆகிய நகரங்களில் முறையே 2.44 லட்சம், 1.50 லட்சம், 1.17 லட்சம் பெண்கள் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களில் பணிபுரிகின்றனர்.
சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான உதயம் பதிவு வலைதளத்தில் தகவல்படி, இந்த ஆண்டு ஜூலை மாதம் வரை நாட்டில் 6,28,447 பெண் தொழில் முனைவோர் (பெண்களால் நடத்தப்படும் நிறுவனங்கள்) இருக்கின்றனர். இதில் தமிழ்நாட்டில் 89,400 நிறுவனங்கள் பெண்களால் நடத்தப்படுகின்றன. மேலும் உத்யோக் ஆதார் பதிவின்படி 2020 ஜூன் வரை நாடு முழுக்க 14,75,207 பெண்களும், தமிழகத்தில் 1,88,061 பெண்களும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களை நடத்தி வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.