மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்பில் அனைத்திந்திய தொகுப்பிலிருந்து இதர பிற்படுத்தப்பட்டோருக்கு (ஓபிசி) 27 சதவிகிதமும், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 10 சதவிகிதமும் இடஒதுக்கீடு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
மருத்துவ பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்புக்கான இந்த இடஒதுக்கீடு 2021-22 கல்வியாண்டில் அமலுக்கு வரவுள்ளது.
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
"இந்த முடிவால் ஏறத்தாழ 1,500 ஓபிசி மாணவர்கள் எம்பிபிஎஸ் படிப்பில் பலனடைவார்கள். மருத்துவ பட்ட மேற்படிப்பில் சுமார் 2,500 ஓபிசி மாணவர்கள் பலனடையவுள்ளனர். மேலும் எம்பிபிஎஸ் படிப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினர் சுமார் 550 பேரும், மருத்துவ பட்ட மேற்படிப்பில் சுமார் 1,000 மாணவர்களும் பயனடையவுள்ளார்கள்.
பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்க தற்போதைய அரசு உறுதிபூண்டுள்ளது."
அனைத்து மாநிலங்களிலும் மருத்துவப் படிப்புக்கான அனைத்திந்திய தொகுப்பில் ஓபிசி பிரிவினர் பலனடையவுள்ளனர். இது மத்தியிலுள்ள திட்டம் என்பதால் மத்திய அரசின் ஓபிசி பிரிவினர் பட்டியல் மூலம் இந்த இடஒதுக்கீட்டைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.