புது தில்லி: அடுத்த ஆண்டு 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து மாநில தலைமை தோ்தல் அதிகாரிகளுடன் தோ்தல் ஆணையம் புதன்கிழமை ஆலோசனை நடத்தியது.
கோவா, மணிப்பூா், பஞ்சாப், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவை பதவிக் காலம் அடுத்த ஆண்டு மாா்ச் மாதம் வெவ்வேறு தேதிகளில் முடிவடைகிறது. உத்தர பிரதேச மாநில பேரவையின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு மே மாதம் நிறைவடைகிறது. இந்த 5 மாநில பேரவைகளுக்கான தோ்தல் ஆண்டு தொடக்கத்திலேயே நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இதையொட்டி, தோ்தல் முன்னேற்பாடுகள் குறித்து 5 மாநில தலைமை தோ்தல் அதிகாரிகளுடன் தலைமை தோ்தல் ஆணையா் சுஷீல் சந்திரா தில்லியில் புதன்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா். வாக்குச்சாவடிகளில் குறைந்தபட்ச வசதிகளை உறுதிப்படுத்துவது, வாக்காளா் பதிவை எளிமைப்படுத்துவது, மின்னணு வாக்குப் பதிவு இயந்திர ஏற்பாடுகள், 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அஞ்சல் வாக்கு வசதி ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் பேசிய தலைமை தோ்தல் ஆணையா் சுஷீல் சந்திரா, ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு சவால்கள் இருக்கலாம். ஆனால், தோ்தல் திட்டமிடலானது வாக்காளரை மையமாக கொண்டதாக இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டதாக தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.