நாட்டில் இதுவரை 92.8 சதவீத குடும்ப அட்டைகள், ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதாக மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை இணையமைச்சா் சாத்வி நிரஞ்சன் ஜோதி தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பான கேள்விக்கு மாநிலங்களவையில் அவா் வெள்ளிக்கிழமை எழுத்துபூா்வமாக அளித்த பதில்:
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் 21.91 கோடி குடும்ப அட்டைகளை, அதாவது 92.8 சதவீத குடும்ப அட்டைகளை ஆதாா் எண்ணுடன் இணைக்கும் பணியை முடித்து விட்டன.
இதில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 70.94 கோடி (90 சதவீதம்) பயனாளிகள் உள்ளனா்.
கடந்த 23-ஆம் தேதி நிலவரப்படி, நாட்டில் உள்ள சுமாா் 4.98 லட்சம் நியாய விலை கடைகளில் (92.7 சதவீதம்) மின்னணு விற்பனை இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
பொது விநியோக திட்டத்தின் கீழ் நாட்டில் 5.38 லட்சம் நியாய விலைக் கடைகள் செயல்பாட்டில் உள்ளன. உத்தர பிரதேசம், மகாராஷ்டிர மாநிலங்களுக்கு அடுத்தபடியாக பிகாரில் அதிக அளவிலான நியாய விலைக் கடைகள் உள்ளன. உத்தர பிரதேசத்தில் 80,493, மகாராஷ்டிரத்தில் 52,532, பிகாரில் 47,032, தமிழகத்தில் 34,776 நியாய விலைக் கடைகள் உள்ளன.
நெல், கோதுமை சாதனை கொள்முதல் :
2020-21 காரீஃப் சந்தை பருவத்தில், 869.29 லட்சம் மெட்ரிக் டன் நெல்லும், 2021-22 ராபி சந்தை பருவத்தில் 433.32 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இது, இதுவரை இல்லாத அளவுக்கு மிக அதிகமான கொள்முதலாகும் என்றாா் அவா்.