புதுச்சேரி: புதுச்சேரி அமைச்சரவை பங்கீட்டை இறுதி செய்ய பாஜக மேலிடத் தலைவர்கள் வெள்ளிக்கிழமை முதல்வர் ரங்கசாமியை சந்திக்கின்றனர்.
புதுச்சேரி மாநிலத்தில் அமைச்சரவை விரிவாக்கம், பேரவைத் தலைவர் தேர்வு தொடர்பாக, வெள்ளிக்கிழமை இறுதிகட்ட பேச்சுவார்த்தை நடக்கிறது.
பாஜக மேலிட பொறுப்பாளர்கள் சி.டி.ரவி, ராஜீவ் சந்திரசேகர் எம்பி ஆகியோர், வெள்ளிக்கிழமை பிற்பகல் புதுச்சேரி வருகை தருகின்றனர்.
இவர்கள் முதல்வர் ரங்கசாமியை அவரது வீட்டில் சந்தித்து, பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட சட்டப் பேரவைத் தலைவர் மற்றும் இரு அமைச்சர்களுக்கான பட்டியலை அளித்து, அமைச்சரவை பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடத்தி, இறுதி செய்ய உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து 7 -ஆம் தேதி சட்டப்பேரவைத் தலைவர் பதவிக்கு தேர்தலும், இதனை அடுத்து14 -ஆம் தேதி பாஜகவின் 2 அமைச்சர்கள்,என்.ஆர்.காங்கிரசின் 3 அமைச்சர்கள் பதவி ஏற்கவும், வாய்ப்புள்ளதாக தேசிய ஜனநாயகக் கூட்டணி வட்டாரத்தில் கூறப்படுகிறது.