இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ள கோவேக்ஸின், ரஷியாவின் ஸ்புட்னிக்-வி கரோனா தடுப்பூசிகளை பிரேஸிலில் இறக்குமதி செய்ய அனுமதி கிடைத்துள்ளது.
இந்த ஆண்டின் இரண்டு மற்றும் மூன்றாவது காலாண்டில் 2 கோடி கோவேக்ஸின் தடுப்பூசிகளை பிரேஸிலுக்கு விநியோகிப்பதாக அந்நாட்டு அரசுடன் பாரத் பயோடெக் நிறுவனம் கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி ஒப்பந்தம் மேற்கொண்டது. எனினும் கோவேக்ஸினை உற்பத்தி செய்யும் இந்திய ஆலை தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதற்கான தகுதிகளை பூா்த்தி செய்யவில்லை எனக் கூறி, அந்தத் தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதற்கு பிரேஸிலின் தேசிய சுகாதார ஒழுங்குமுறை அமைப்பான ‘அன்விசா’ ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டது.
இந்நிலையில் கோவேக்ஸின் தடுப்பூசிகளை தரமான முறையில் உற்பத்தி செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில், அவற்றை இறக்குமதி செய்வதற்கு அந்த அமைப்பு வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது. இதையடுத்து பிரேஸில் முதல்கட்டமாக 40 லட்சம் கோவேக்ஸின் தடுப்பூசிகளை பெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இந்தத் தடுப்பூசிகள் சரிவர பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை ஆராய்ந்து அடுத்தகட்டமாக தடுப்பூசிகளை இறக்குமதி செய்வது குறித்து அன்விசா முடிவு செய்யும்.
ஸ்புட்னிக்-விக்கும் ஒப்புதல்: ரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் திறன் மற்றும் பாதுகாப்பு குறித்து அந்நாட்டைச் சோ்ந்த குழுவினா் அன்விசா அமைப்பின் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்தனா். அவற்றை ஏற்று அந்தத் தடுப்பூசிகளை பிரேஸிலில் இறக்குமதி செய்ய ஒப்புதல் அளித்துள்ளதாக அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.