நாடு முழுவதும் மாநிலங்களிடம் 1.65 கோடி கரோனா தடுப்பூசிகள் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
கரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு இதுவரை 24 கோடிக்கும் அதிகமான (24,30,09,080) கரோனா தடுப்பூசிகளை மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் இலவசமாக வழங்கியுள்ளது.
சனிக்கிழமை காலை 8 மணி வரையிலான தரவுகளின் அடிப்படையில், பல்வேறு வழிகளில் வீணானவை உள்பட மொத்தம் 22,65,08,508 தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் சுமாா் 1.65 கோடி (1,65,00,572) கரோனா தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன.
ஒவ்வொரு மாதமும் மத்திய மருந்துகள் ஆய்வகம் அனுமதி அளித்த மொத்த தடுப்பூசிகளில் 50 சதவீதத்தை இந்திய அரசு கொள்முதல் செய்து, மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்கி வருகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.