கட்சித் தலைமை கேட்டுக்கொண்டால் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்வேன் என கர்நாடக முதல்வர் பி.எஸ். எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
இதுபற்றி எடியூரப்பா தெரிவித்தது:
"கட்சி மேலிடத்துக்கு என் மீது நம்பிக்கை இருக்கும் வரை நான் முதல்வராகத் தொடர்வேன். அவர்கள் எப்போது கூறுகிறார்களோ அன்றைய தினம் நான் முதல்வர் பதவியிலிருந்து விலகி ராஜிநாமா செய்வேன். மாநிலத்தின் நலனுக்காக என்னை முழுவதும் அர்ப்பணிப்பேன். என்னுடைய நிலைப்பாடு தெளிவாக உள்ளது. கட்சித் தலைமை எனக்கு வாய்ப்பளித்துள்ளது. அதைப் பயன்படுத்தி என்னால் முடிந்தவற்றைச் செய்வேன். மற்றவை மத்தியத் தலைமையின் கைகளில் உள்ளன.
நாட்டில் எந்தவொரு மாநிலத்திலும் எப்போதும் மாற்று இருக்கும். கர்நாடகத்தில் மாற்று இல்லை என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. மத்தியத் தலைமைக்கு என் மீது நம்பிக்கை உள்ளவரை நான் முதல்வராகத் தொடர்வேன்" என்றார் எடியூரப்பா.
கர்நாடகத்தில் தலைமை மாற்றம் குறித்து பேச்சுகள் எழுந்து வரும் நிலையில் முதன்முறையாக இதுதொடர்பாக முதல்வர் எடியூரப்பா மௌனம் கலைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.