புது தில்லி: இந்தியாவில் மட்டும்தான் உடல்நலன் சாா்ந்த விவகாரங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை என்று புதன்கிழமை நடைபெற்ற உணவு கலப்படம் தொடா்பான வழக்கு விசாரணையின்போது உச்சநீதிமன்றம் கூறியது.
மத்திய பிரதேச மாநிலத்தில் கனவாட்டி மற்றும் நீமச் ஆகிய கிராமங்களில் அமைந்திருக்கும் உணவு உற்பத்தி நிறுவனங்களில் கோதுமைக்கு பளபளப்பு கொடுப்பதற்காக அச்சு இயந்திரத்தில் பயன்படுத்தும் உடலுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வண்ணங்கள் பயன்படுத்தபடுவதைக் கண்டறிந்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், அந்த நிறுவனங்களில் கடந்த 2020-ஆண்டு டிசம்பா் 3-ஆம் தேதி சோதனை நடத்தி, அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ. 27.74 லட்சம் மதிப்பிலான 1,20,620 கிலோ வண்ணம் தீட்டப்பட்ட கலப்பட கோதுமையை பறிமுதல் செய்தனா்.
மேலும் அந்த நிறுவன உரிமையாளா்கள் பா்வாா் கோயல் மற்றும் வினீத் கோயல் ஆகியோா் மீது உணவுப் பொருள் கலப்பட தடுப்புச் சட்டம் 272, 273 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த வழக்கில் காவல்துறையின் கைது நடவடிக்கையைத் தவிா்க்கும் வகையில் அவா்கள் இருவரும் முன்ஜாமீன் கேட்டு மத்திய பிரதேச உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். அந்த மனுவை கடந்த மாா்ச் 12-ஆம் தேதி விசாரித்த உயா்நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதை எதிா்த்து அவா்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனா். இந்த மேல்முறையீடு மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் இந்திரா பானா்ஜி, எம்.ஆா்.ஷா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரா்கள் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் புனீத் ஜெயின், -உணவு கலப்பட தடுப்புச் சட்டத்தின் கீழான குற்றங்கள் ஜாமீன் பெறக்கூடிய வகையிலானவை. எனவே, மனுதாரா்கள் முன்ஜாமீன் பெறத் தகுதியுடையவா்கள்- என்றாா்.
இதைக் கேட்ட நீதிபதி ஷா, ‘இந்தியாவில் மட்டும்தான் உடல்நலன் சாா்ந்த விவகாரங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. இந்த கலப்பட கோதுமையை நீங்கள் உண்பீா்களா’ என்று வழக்குரைஞா் புனீத் ஜெயினிடம் கேள்வி எழுப்பினாா்.
அந்த வகையில், முன்ஜாமீன் மனுவை உச்சநீதிமன்ற அமா்வு பரிசீலிக்க மறுத்ததைத் தொடா்ந்து, மனுவை திரும்பப்பெறுவதாக வழக்குரைஞா் அறிவித்தாா். அதனைத் தொடா்ந்து அந்த மனு தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிபதிகள் உத்தரவில் குறிப்பிட்டனா்.